Sunday, May 31, 2009

மனிதனின் பலம் நம்பிக்கையில் தான்

மனிதனாக பிறப்பதற்கு அறிய மாதவம் செய்ய வேண்டும் என்ற பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம் . பூர்வ ஜன்மத்தில் புரிந்த நல்ல கர்மவினையால் நாம் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்கிறோம் என்று புராணங்கள் சொல்லுகின்றன . இந்த மனிதப் பிறவியை அபூர்வமான பிறவி என்றும் சொல்லலாம் . எத்தனையோ பிறவிகள் நாம் எடுத்திருப்போம் , அதிலும் மனிதப் பிறவி நமக்கு கிடைத்த பொக்கிஷமாகும் . இந்த பிறவியில் அறிவாற்றல் , மனோசக்தி , திறமை மூன்றும் இணைந்து மனிதனை செயல்படுத்துகிறது . இவைகளே மனித்னக்குள்ளிருக்கும் சக்தி என்று சொல்லலாம். இந்த சக்தியானது மனிதனுக்கு அவனை பற்றி தெரிந்து கொள்ளச் செய்கிறது . அவனுக்குள்ளே புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வருகிறது . மனிதனுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது . தனம்பிக்கையுள்ள மனிதன் சாதனையை படைக்கிறான் . மாபெரும் வரலாற்றை உருவாக்குகிறான் . மனிதனுடைய சக்தியே மனிதகுலத்தை வளர்க்கிறது . இந்த சக்தி அழகிய நம்பிக்கையான சமுதாயத்தை படைக்கிறது . நம்பிக்கையானது மனிதனை சாதிக்க முடியாதவற்றையும் சாதிக்கும்படி செயல்படுத்துகிறது .
எதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயங்க வைக்கிறது . இந்த சக்தியை கடவுள் என்றும் சொல்லலாம் , மனிதனின் நம்பிக்கை என்றும் சொல்லலாம் . இதிலிருந்து நம்பிக்கை தான் கடவுள், கடவுள் தான் நம்பிக்கை என்ற அடிப்படை பதிலையும் நாம் பெறுகிறோம் . இந்த சக்தி உலகத்தை ஒரு கட்டுபாட்டுக்குள் இயங்க வைக்கிறது . இதனை மீறி இயங்கினால் உலகம் தன்னுடைய அழிவையும் காண நேரிடுகிறது . இயற்க்கை மற்ற அனைத்து ஜீவன்களும் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டு செயல்பட்டால் உன்னதமான உலகத்தை உருவாக்கலாம் . இந்த ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு பக்கபலமாக அமைகிறது . அவனுடைய நம்பிக்கை துளிகள் மாபெரும் சாகரத்தை உருவாக்குகிறது . அதுவே அன்பு, அறிவு , பாசம், பண்பு ஆற்றல் , நேர்மை , பண்பாடு ஆகிய இயல்புகளை மனிதனுக்கு தருகிறது .

மனிதன் மட்டும் தான் ஆறு அறிவோடு பிறக்கிறான் . இந்த ஆறாவது அறிவானது மனிதனுக்கு சமீபத்தில் நிகழப் போகும் சம்பவத்தை முன்கூட்டியே உணர வைக்கிறது. இந்த அறிவாற்றலானது மனிதனை அபூர்வமான செயலை செயல்படுத்தச் செய்கிறது . நடக்கப் போகும் அசம்பாவிததிலிருந்து மனிதனை காப்பாற்றுகிறது . அவனுடைய அன்பும் பாசமும் சமுதாயத்தை வாழ வைக்கிறது , மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறான் . மனிதனுடைய பலம் நம்பிக்கையில் தான் என்ற உண்மையை அவனுக்கு அறிய வைக்கிறது.

மனிதனுக்கு எது உண்மையான சந்தோசம்

உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சந்தோசத்தை அனுபவிக்கிறான் . சந்தோசத்தின் பரிமாணத்தை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெவ்வேறு கோணத்தில் சந்திக்கிறான் . ஒருவன் அமைதியில் சந்தோசத்தை காண்கிறான் , இன்னொருவன் நல்ல உறவுகளையும், நண்பர்களையும் பெற்றதில் சந்தோசம் அடைகிறான் , மற்றொருவன் ஒவ்வொரு செயலிலும் வெற்றி காணும் போது சந்தோசம் பெறுகிறான் . ஆனால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சந்தோசத்தை வெவ்வேறு விதமாக அனுபவித்தாலும் , இந்த சந்தோசமானது மனிதனுக்கு புதிய தெம்பைக் கொடுக்கிறது . இன்பமயமான சூழ்நிலையை உருவாக்குகிறது , உறவுகளை பலப்படுத்துகிறது . ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தை எந்த நோக்கத்தோடு புரிந்து கொள்கிறான் என்பது மிகவும் முக்கியம் .

வாழ்க்கை என்றால் அதனோடு சந்தோசத்தையும் இணைத்து பேசப்படுகிறது . வாழ்க்கையின் சந்தோசம் ஆத்மா சந்தோசம் என்றும் , வெளிப்படையான சந்தோசம் என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது . ஒவ்வொரு மனிதனும் அவனது முழுமையான வாழ்க்கையில் இந்த இரண்டு வகையான சந்தோசங்களை அனுபவிக்கிறான் . மனிதன் இளவயதிலே பெரிய பதவியை வகிக்கிறான் , அதிக செல்வத்தை சம்பாதிக்கிறான் , ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறான் . அந்த சின்ன வயதில் ஒளிமயமான பல வண்ணங்களுடைய வாழ்க்கை மனிதனுக்கு சந்தோசத்தை தருகிறது . அப்போது அவன் சந்தோசத்தை குறுகிய நோக்கத்தோடு பார்க்கிறான். அந்த இளவயதானது சந்தோசத்தை ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்து ரசிக்கிறது . அந்த வயதில் மனிதன் அவனுடைய சந்தோசத்தை மட்டும் தான் சிந்திக்கிறான். மேலும் மனிதனின் எண்ணங்களும் அவனைப் பற்றி தான் சிந்திக்கிறது . தான் என்ற எண்ணம் கொண்டு வாழும் மனிதனின் வாழ்க்கையில் சந்தோசம் நிலைத்து இருப்பதில்லை . பொன், பொருள் , பதவி , கௌரவம், ஆடம்பரம் , ஆணவம் ஆகிய அனைத்திலும் சந்தோசத்தை காணும் மனிதனுடைய வாழ்க்கை வெறும் வெத்து வெட்டான வாழ்க்கைக்கு சமமாகும் . இதனை வெளிப்படையான சந்தோசம் என்று சொல்லலாம் . இந்த வெளிப்படையான சந்தோசம் மனிதனுக்கு ஒரு போதும் நிலைப்பதில்லை . இந்த தத்துவத்தை மனிதன் கடைசி காலத்தில் அறிந்து கொள்கிறான் . அதுவரை இந்த பகட்டான வாழ்க்கை மனிதனை படாதபாடு படுத்தி விடுகிறது . அந்த சமயத்தில் மனிதன் பள்ளம் மேடு , ஏற்றத் தாழ்வு , உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வாழ்க்கையினுடைய பல்வேறு பரிமாணங்களை அனுபவிக்கிறான் . மனிதன் வாழ்க்கையில் பல சம்பவங்களை சந்திக்கிறான் . அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவனுக்கு ஒவ்வொரு பாடத்தை கற்பிக்கிறது .

அவன் வாழ்க்கையில் பலமுறை விழுந்து எழுகிறான் . ஒவ்வொரு விழுதலும் அவனுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வருகிறது . இந்த மாற்றம் அவனுடைய மனதை பக்குவப்படுத்துகிறது . அவனுடைய பகுத்தறிவை வளரச் செய்கிறது . இந்த மாற்றமானது மனிதனுடைய எண்ணத்தை மாற்றி அமைக்கிறது . மனிதனுக்கு வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றுகின்றன . அவனுடைய ஒவ்வொரு எண்ணமும் வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவத்தை நிகழச் செய்கிறது. இந்த சம்பவமானது அவனை ஆக்கப்பூர்வமான செயலை செயல்படுத்த வைக்கிறது . இந்த மாற்றமானது மனிதனை தனக்கு மட்டும் எண்ணாமல் மொத்த சமூகத்தை பற்றி எண்ணவைக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலிருந்து கிடைக்கும் நல்ல பலன்களை மனிதன் சமூகத்தோடு பகிர்ந்து கொள்கிறான் . இந்த மாற்றம் மனிதனுக்கு பரந்த மனப்பான்மையை கொடுக்கிறது . அவன் அனைத்தையும் பரந்த நோக்கத்தோடு அணுகுகிறான் . மனிதன் சமூகத்தை பற்றி அக்கறை எடுத்துக் கொள்கிறான் . அப்போது மனிதன் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் சமூகத்தின் நலத்தை பெரிதும் கருதுகிறான் . மனிதன் சமூகத்தின் வளர்ச்சியை கண்டு சந்தோசம் பெறுகிறான் . தனுக்கு கிடைத்த சந்தோசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறான் . தனுக்குள்ளே ஏற்படும் மாற்றத்தின் வழியாக புதிய சமூகத்தை படைக்கிறான் . வளமான சமுதாயம் மக்களின் வாழ்க்கையை மலரச் செய்கிறது . மனிதனுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது . மனிதன் சமூகத்தை நேசிக்க தொடங்குகிறான் . இந்த மாற்றம் அன்பு, பாசம் , கருணை , பண்பு ஆகிய தன்மைகளை மனிதனுக்கு வரமாக அளிக்கிறது . அவனுக்குள்ளே தன்னம்பிக்கை பிறக்கிறது . இந்த மாற்றம் மனிதனை மனிதனாக வைக்கிறது . இந்த மாற்றம் மனிதனுக்கு ஆத்மா சந்தோசத்தை கொடுக்கிறது . மனிதன் எந்த வயதிலும் சந்தோசத்தை பெறுகிறான் , எந்த நேரத்திலும் சந்தோசத்தை அடைகிறான் . இதற்கு வயது வரம்பில்லை , காலம் தடையில்லை . மனிதன் இந்த ஆத்மதிருப்தியை உணர்கிறான் , அனுபவிக்கிறான் . மனிதன் அனுபவிக்கும் ஆத்மதிருப்தி தான் வாழ்க்கையில் உண்மையான சந்தோசம் . இந்த சந்தோசத்தை பற்றி மனிதனுக்கு எந்த மொழியாலும் புரிய வைக்க முடியாது . இதை மனிதன் உணரத் தான் முடியும் . எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றும் அறிவேன் பராபரமே என்ற கருத்தைக் கொண்டு வாழும் மனிதன் விலைமதிக்க முடியாத உண்மையான சந்தோசத்தை அடைகிறான் .


Saturday, May 30, 2009

ஆன்மீகமும் வாழ்க்கையும்

ஆன்மிகம் மனிதனுடைய வாழக்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றுகிறது . ஆன்மீகம் என்பது மனிதனின் வாழக்கையில் தோன்றும் புதிர்களுக்கு தீர்வு கொடுத்து உண்மையான பக்தியும், நம்பிக்கையும் வளர்க்கிறது . ஆன்மீகமானது மனிதனுடைய வாழ்க்கையில் பரவசத்தை கொடுக்கிறது .

ஒரு கட்டிடம் வலிமையாக நிற்பதற்கு அதனுடைய அடித்தளத்தை வலிமையாக அமைக்க நேரிடுகிறது . அதுபோல மனிதனின் வாழ்க்கையில் புத்துணர்ச்சியும் , தெம்பும் பெறுவதற்கு அவனுள்ளே புதைந்து கிடைக்கும் ஆன்மீகம் வளர வேண்டும். புத்துணர்ச்சி நிறைந்த வாழ்க்கை மனிதனின் வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றி அதனுடைய ஆழ்ந்த நோக்கத்தை புரியவைக்கிறது. நாம் எதற்கு வாழ்கிறோம் என்று புரியாமல் வாழ்க்கை வாழ்வது நடுக்கடலில் படகு ஒன்று திசை மாறி மேல செல்ல முடியாமல் தவிப்பது போலிருக்கிறது . ஆன்மீகமானது வாழ்க்கையின் பாதையை மனிதனுக்கு உணர்த்துகிறது . மனிதனை கடவுளோடு இணைக்கிறது . ஆன்மீகம் மனிதனின் வாழக்கையை நம்பிக்கையோடு மாற்றி அமைப்பதில் பெரிதும் உதவுகிறது.

ஆன்மீகத்தால் மனிதன் முழுமையான வாழக்கையை அடைகிறான். மனிதனுக்குள்ளே ஆன்மீகம் வளர வளர அவனது வாழ்க்கையும் தூய்மை பெறுகிறது. மனிதனுக்கும் கடவுளுக்குமிடையே உள்ள ஒரு உறவை வளர்க்கிறது . கடவுளோடு இணைந்துக் கொண்ட மனிதன், அனைத்து மனித குலத்தொடும் உறவை வளர்த்துக் கொள்கிறான் . ஆன்மீகமானது மனிதனை அனைத்து ஜீவன்களையும், பூமியின் இயற்க்கை வளத்தையும் நேசிக்க வைக்கிறது.

ஆன்மீகம் மனிதனுக்குள்ளே மிதந்து கொண்டிருக்கும் அகம்பாவம், ஆணவம் போன்ற குணங்களை அழித்து விடுகிறது . அவனுக்குள்ளே அன்பையும், பரிவையும் நிரப்புகிறது. ஆன்மீகம் மனிதனை மனிதாபிமானம் நிறைந்த மனிதனாக மாற்றுகிறது .

ஆன்மீகத்தை கடைபிடிப்பதற்கு எந்தவிதமான சாதனையோ அல்லது தனிபயிற்சியோ செய்ய அவசியமில்லை . மனிதன் கடவுளிடம் கொண்ட மதிப்பும், உயர்வும் அதிகரித்து அவனுள்ளே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது . அதையே ஆன்மீகம் என்று சொல்லலாம் . இந்த விழிப்புனர்சியே அவனை பெரிய ஞானியாக மாற்றுகிறது. ஞானியானவன் தெளிவான சிந்தனையை அறிவுரையின் மூலம் மக்களுக்கு போதிக்கிறான் . ஞானம் நிறைந்த மனிதன் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே நிலவி வரும் வேறுபாட்டை அழிக்கிறான் . ஞானம் நிறைந்த மனிதன் எந்த மதம் மனிதகுலத்தை அழிக்க முற்படுகிறதோ அந்த மதத்தை மக்களிடையே பரப்புவதற்கு ஒரு பொழுதும் முயற்சி எடுத்துக் கொள்ளமாட்டான். மதமும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று மக்களுக்கு உணர்த்துகிறான் .

நமக்குள்ளே இருக்கும் தனிமையை அழித்து மக்களோடு மக்களாக இணைந்து அன்பை பொழிந்து, உறவுகளை வளர்த்து கடைசியில் கடவுளை அடைவது தான் தலைசிறந்த மதத்தின் அடையாளம் . ஞானம் நிறைந்தவனும் இந்த சாரத்தை போதிக்கிறான் , ஆன்மீகத்தை மக்களிடையே வளர்க்கிறான், நல்ல எண்ணங்களுக்கு விதை விதைக்கிறான் . ஆன்மீகம் மனிதன் தழைப்பதற்கு ஒரு ஊன்று கோலாக அமைகிறது . ஆன்மீகம் நிறைந்தவன் எந்த கடினமான பிரச்சனைக்கும் தெளிவான சிந்தனையோடு அமைதியான வழியிலே தீர்வு கொள்கிறான் .

ஆன்மீகம் விஞ்ஞானத்தையும் வளரச் செய்கிறது . விஞ்ஞானத்தோடு சமூக வளர்ச்சியும் பெறுகிறது . சமூக வளர்ச்சி என்பது மனிதனின் வாழ்க்கையோடு இணைந்தது என்று சொல்லலாம் . அவனது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைக்கிறது .

புரிந்தும் புரியாத வாழ்க்கை வாழ்வதை விட வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து கொண்டு வழிநடத்தி செல்லுபவன் தான் வாழ்க்கையின் உன்னதமான நோக்கத்தை புரிந்து கொள்கிறான் . ஆன்மீகம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை தெரியபடுத்துகிறது . வாழ்க்கையின் சிறப்பான சாரத்தை அறிய வைக்கிறது . இதை அறிந்து வாழ்பவன் தான் முழுமையான வாழ்க்கையை வாழ்க்கிறான் . நமக்குள்ளே பிறக்கும் பல கேள்விகளுக்கு இந்த ஆன்மீகம் தான் பதில் கொடுக்கிறது . நமக்குள்ளே இருக்கும் ஆன்மாவை கேட்டால் ஆன்மீகத்தின் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் .

Wednesday, May 27, 2009

பிறப்பும் இறப்பும் மனித வாழ்க்கையோடு இணைந்தது

பிறப்பு ஒன்று இருந்தால் அதனுடன் இறப்பு ஒன்றும் இருக்கிறது . பிறப்பும் இறப்பும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள் . மனிதன் பிறவி எடுக்கிறான் . அவனுக்கு உயிரும் கொடுக்கிறான் . இந்த உயிர் என்பது ஆத்மாவை குறிப்பிடுகிறது . மனிதன், உடலில் ஆத்மா இருக்கும் வரை உயிரோடு இருக்கிறான். எப்போது ஆத்மா மனிதனின் உடலை விட்டு பிரிகிறதோ அப்போது மரணம் அடைகிறான் . மரணத்தால் இந்த உடல் அழிகிறது . ஆனால் ஆத்மா அழிவதில்லை . மரணம் என்பது மற்றொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று சொல்லலாம் . மரணம் என்ற அட்டவணையுடன் மனிதன் ஜனனம் எடுக்கிறான் . ஒரு மனிதன் மரணம் அடைகிறான் என்றால் அவன் மறுஜனனம் எடுக்கிறான் என்ற பொருளடக்கம் கொண்டது . பிறப்பும் இறப்பும் இரண்டு சக்கரங்களாக வாழக்கையை சுழல வைக்கிறது . ஜனனம் தான் மரணம் , மரணம் தான் ஜனனம். இது தான் உண்மையான ஆன்மீக தத்துவம் .

இந்த இரண்டு நிழிக்வுகள் இடையே மனிதன் எத்தனை மாறுபட்ட காலங்களை சந்திக்கிறான் . அதிலிருந்து பல அனுபவங்களை கற்றுக் கொள்கிறான் . காலங்கள் ஓட ஓட மனிதனின் வயதும் ஏறுகிறது . பால்யம் , இளமை , முதுமை என்று மூன்று விதமாக மனிதனின் வாழக்கை வகுக்கப்படுகிறது . மனிதன் எப்படி பழயவைகளை மாற்றி புதுபிக்கிரானோ அதுபோல முதுமை எய்த மனித உடலில் இருந்து ஆத்மா பிரிந்து வேறு ஒரு உடலில் குடி கொள்கிறது . மனிதனுடைய வாழக்கை சக்கரம் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது . தொடக்கப்பட்ட ஒரு செயல் முடிவடைந்து அதன் முடிவே மற்றொரு செயலின் தொடக்கமாக இருப்பதை போல பிறப்போடு தொடங்கிய மனித வாழக்கை மரணத்தில் முடிவடைந்து அதுவே இன்னொரு பிறவியின் தொடக்கமாக அமைகிறது . ஆதியும் அந்தமும் முடிவற்றது போல மனித வாழ்க்கையோடு பிறப்பும் இறப்பும் இயங்கிக் கொண்டே இருக்கிறது .

மரணத்தால் மனித உடல் மட்டும் அழிகிறது . அவனுள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் ஆத்மா அழிவதில்லை. மனிதன் இந்த தத்துவத்தை அறியாமல் மரணத்தை கண்டு பயப்படுகிறான் . முதுமை அடைந்த மனிதன் ஒவ்வொரு நாளும் மரண பயத்தோடு வாழ்க்கையோடு வாழ்கிறான் . ஆத்மா என்றும் அழியாதது. இதற்க்கு மரணமே கிடையாது . ஆத்மா ஒரு இடத்தில் நிலையில்லாதது. இந்த தத்துவத்தை புரிந்து கொண்ட மனிதன் வாழக்கையில் மரணத்தை ஒரு மாயையாக நினைக்கிறான் . எப்படி முழு நிலவை பாஉர்நாமி என்றும் , தேயும் நிலவை அமாவாசை என்றும் சொல்லுகிறோமோ, அதுபோல உடல் இயங்கும்போது உயிரோடு இருப்பதாகவும், உடல் அழியும்பொது உயிரற்ற சவமன்றும் மனித வாழக்கையை ஒரு நிலவோடு ஒப்பிடலாம் . இந்த ஜீவாத்மா என்றும் அழியாதது . மரணம் என்பது ஒரு வாழ்க்கையின் முடிவு, இந்த முடிவே இன்னொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று சொல்லலாம் .

மனிதபிறவி என்பது அற்புதமானது . முற்பிறவியில் செய்த நல்ல கர்மத்தால் இந்த பிறவியில் மனிதனாக பிறக்கிறோம் என்று புராணங்கள் சொல்லுகின்றன . மனிதனாக பிறப்பதற்கு அறிய மாதவம் செய்திட வேண்டும் . அதிலும் எடுத்த பிறவியிலே ஆரோக்கியமான பிறவி எடுப்பது நமக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம். இந்த பிறவியின் பயனை நன்றாக அறிந்து உடல் , மனம் ,மூளை மூன்றையும் இணைத்து செயல்படுத்தி வாழக்கை பயணத்தை சலனமின்றி தெளிவான பாதையில் வழிநடத்தி அமைதி , அன்பு , அறிவு மூன்றையும் மக்களோடு பகிர்ந்து கொண்டு உன்னதமான வாழக்கையை வாழ்பவன் இறையருளை பெறுகிறான் . ஒரு மனிதனின் வாழ்க்கை தான் அந்த மனிதனின் தன்மையை எடுத்து காட்டுகிறது . உடல் அழிந்த பின்பு அவனுடைய நல்ல குணங்கள், அவன் செய்த நல்ல செயல்கள் என்றும் நம்மோடு நிலைத்து நிற்கின்றன . இவைதான் ஒரு மனிதனின் வாழக்கையை வரலாறாக மாற்றுகிறது . மனிதன் எத்தனை காலங்கள் வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை , அவன் எப்படி வாழ்ந்தான் என்பது தான் முக்கியம் . இதை அறிந்து வலமாக வாழக்கை வாழலாமில்லையா .

Monday, May 25, 2009

உங்கள் கைகளில் உங்கள் வாழ்க்கை

உலகில் எத்தனையோ சம்ப்வங்கள் நடக்கின்றன . ஒவ்வொரு சம்பவமும் சரியான நேரத்தில்தான் நடக்கின்றது . அதுபோல ஒவ்வொரு சம்பவமும் சரியான இடத்தில்தான் நிகழ்கின்றது . ஒவ்வொரு உயிரும் இந்த உலகில் சரியான நேரத்தில் சரியான இடத்தில்தான் பிறக்கின்றது .

எத்தனையோ காலங்கள் ஓடிவிட்டன . இன்னும் எத்தனையோ காலங்கள் ஓட வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன . அத்தனை உயிரினங்களில் ஒருசில குழ்ந்தைகள் அறிவு கூர்மையும், இன்னும் சில குழைந்தைகள் திறமைசாலியாகவும் மற்றும் சில குழைந்தைகள் வேகமாகவும் துல்லியமாகவும் செயல்படுத்தும் திறனை கொண்டதாகவும் பிறக்கின்றன . இந்தக் குழைந்தைகள் ஆக்கபூர்வமான அறிவுத் திறனைக் கொண்டர்வர்கள் என்று சொல்லலாம். இவர்களால் இந்த உலகம் எத்தனையோ புதிய பாதையை மைல்கனக்கு கடந்து வருங்கால மனிதபிறவிக்கு வழிகாட்டியாக நிற்கிறது .

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயற்ச்சி எடுக்கிறான் . அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் சிலது சாதகமாகவும் மற்றவை பாதகமாகவும் அமைகின்றன . பாதகமான முயற்ச்சியை கண்டு மனம் தளராமல் மேலும் மேலும் முயற்ச்சி செய்து கொண்டே இருக்கவேண்டும் . கவனத்தோடும் பொறுமையோடும் செய்யும் செயல்கள் அவனது வாழ்க்கையை அருமையாகவும் இனிமையாகவும் அமைத்துகொடுப்பதில் பெரிதும் உதவுகிறது .

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழக்கையில் பொன்னான வாய்ப்புகள் கிடத்திருக்ககூடும். சரியான வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்தி செயல்படுபவன் மிகவும் திறமைசாலி என்று சொல்லலாம் . அதுபோல ஒவ்வொரு வாய்ப்பும் வெற்றியையும் தோல்வியையும் மாறிமாறி கொடுக்கிறது. தோல்வியை கண்டு மிரளாமல் அதையே ஒரு பாடமாக
எடுத்துக்கொண்டு வெற்றியின் முதல்படியாக கருத வேண்டும் .

மனிதனின் விடாமுயற்ச்சி சாதனை படைக்க தூண்டுகோலாக அமைகிறது . குறுகிய காலத்தில் விஞ்ஞானம் , சமுதாய வளர்ச்சியை கொடுத்த மனிதம் பெரிதும் போற்றத்தக்கது .

இந்த மனிதபிறவி மிகவும் அருமையானது , அற்புதமானது, அழகானது . இந்த வாழக்கையை சொர்க்கமாக அமைத்துக் கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது . உங்கள் மனக்கண்களைத் திறந்து பாருங்கள். இந்த உலகம் அழகாக தெரியும். அன்பை பகிர்ந்து பாருங்கள் . இந்த மனிதம் அற்புதமாக தோன்றும். நீங்களே ஒரு பிறவி, உங்களால் இன்னொரு பிறவியும் உருவாகிறது. இந்த அருமையான சாரத்தை புரிந்து கொண்டு வாழக்கையை நேசியுங்கள் .