Sunday, June 7, 2009

மனிதனே உன்னை அறிந்து கொள்

உலகில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன . அவற்றில் ஒரு சில சம்பவங்கள் அப்படியே நின்று விடுகின்றன . வேறு சில சம்பவங்கள் ஆழ்ந்த காயம் பட்டு மறையாத வடு போல மனதை அரித்து விடுகின்றன . சம்பவங்களை நல்ல சம்பவங்கள் என்றும் , கெட்ட சம்பவங்கள் என்றும் இரண்டு வகைகளாக பாகுபடுதுகிறோம். நல்ல சம்பவம் நிகழும் போது மனிதனுக்கு இனிமையான உணர்வுகளைத் தருகிறது . கெட்ட சம்பவம் மனிதனுக்கு வேதனையை கொடுக்கிறது . மனிதனுடைய வாழ்க்கைப் பயணத்தில் இந்த இரண்டு சம்பவங்களும் மாறிமாறி நடக்கின்றன . இதனை எந்த மனிதனாலும் தவிர்க்க முடியாது . மனிதனுக்கு ஒரு கெட்ட சம்பவம் நடக்கின்ற போது அடுத்ததும் கெட்டவையாகவே நடக்கிறது . அடுத்தடுத்து கெட்ட சம்பவங்கள் நடக்கின்ற போது மனிதன் வாழ்க்கை என்ற துடுப்பை கைநழுவ விடாமல் தொடர்ந்து எதிர்நீச்சல் போட வேண்டும் . அவன் குழப்பம் அடைந்து அவனுக்குள்ளே ஒருவிதமான பயம் பிறக்கிறது . அப்போது சரியான குரு ஒருவர் கிடைத்திருந்தால் அவன் நிச்சயமாக இந்த வாழ்க்கை சாகரத்தின் கொந்தளிப்பிலிருந்து மீண்டு வர முடியும். அப்படிப்பட்ட குருவிடம் தனி ஒரு மனிதனை மாற்றுவது மட்டுமில்லாமல் மொத்த சமுதாயத்தையும் மற்றக் கூடிய சக்தியும் இருக்கிறது . இன்று ஒவ்வொரு நாடும் அழிவுப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது . இந்த விஷத்தை முளையிலே தூக்கி எரிவதிற்கு பக்குவமான குரு கிடைப்பாரா என்று ஒவ்வொரு மனிதனின் மனமும் ஏங்குகிறது .

ஒரு நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அழிவுப் பாதையை தேர்ந்து எடுத்துக் கொண்டு வன்முறையை கையாண்டு வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்கிறான் . முதலில் கண்மூடித்தனமாக மதம் கொண்ட யானையைப் போல ஒரு நாட்டையே சின்னாபின்னமாக்கிறான். இன்றைய மனிதன் எல்லாவற்றையும் தப்புத்தப்பாகவே முடிவெடுத்து செயல்படுகிறான் . அவனுடைய தப்பான நோக்கம் எவ்வளவு பெரிய சேதத்தை உருவாக்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் இந்த அமைதிப் பூங்காவில் புயலடிப்பதற்கு பதிலாக சுகமான தென்றல் வீசியிருக்குமல்லவா ?

மனிதனுடைய மனம் முழுவதும் பொறாமையும் பொச்சரிப்பும் குடிகொண்டுள்ளது . இது போதாதென்று ஏழை - பணக்காரன் , இல்லாதவன் - இருக்கப்பட்டவன் , உயர்ந்தவன் -தாழ்ந்தவன் , ஜாதி -மதம் போன்ற விரோதிகளும் அவனைச் சுற்றி நடமாடுகின்றன . இவை அனைத்தும் மனிதனை ஒரு கொலைக்காரனாகவோ , கொள்ளை அடிப்பவனாகவோ , தீவிரவாதியாகவோ மாற்றுகிறது . இப்படிப்பட்ட மாற்றம் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து அவனை மண்ணோடு மண்ணாக புதைத்து விடுகிறது . வீட்டுக்குள்ளே கணவன் -மனைவி கருத்து வேறுபாடு , வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை கைப்பற்றுவதற்கு போடும் தெருச் சண்டை , சமூகத்தின் இருபிரிவினர்களுக்கிடையே நடக்கும் ஜாதிக் கலவரம் , இரு நாட்டு இடையே மதத்தால் உருவாகும் வன்முறைகள் , பயங்கரவாதம் என்று படிப்படியாக நடக்கும் ஒவ்வொரு செயலும் மனிதனை ஒரு காட்டு மிருகமாக காட்டுகிறது . மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனும் வெறித்தனமாக செயல்படும் செயல் ஒரு நாட்டையே சீரழித்து விடுகிறது. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் . அப்போது நாடும் உருப்படும் , அவனுடைய வீடும் உருப்படும் .

Saturday, June 6, 2009

மனசாட்சி மனிதனுக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனசாட்சி வாழ்கிறது . ஒவ்வொரு மனிதனும் மனசாட்சி சொல்கிறபடி நடந்தால் தவறுகள் அதிகமாக நிகழ்வதை தடுக்கலாம் . மனசாட்சி மனிதனுக்கு எது நல்லது , எது கெட்டது என்று தெரியப்படுத்துகிறது . மனிதன் நல்ல செயலை செய்தபிறகு அவன் ஆத்மாத்ம திருப்தி அடைகிறான் . அவன் கெட்டதை செய்தால் குற்ற உணர்வோடு பரிதவிக்கிறான் . இப்படிப்பட்ட மனிதனை மனசாட்சியுள்ளவன்என்று சொல்லலாம் . சொத்துக்கள் , செல்வம் , குடும்பம் இவை அனைத்தும் மனிதனுடன் இறுதிவரை செல்லமுடியாது . ஆனால் அவன் செய்த தர்மம் , புண்ணியம் இரண்டும் ஆத்மசொரூபமாய் மனிதனை வழி நடத்திச் செல்கிறது . இந்த உலகத்தின் மாயை மனிதனுக்கு சொந்தமில்லை , அவை மனிதனுக்கு எந்தவிதத்திலும் அமைதி , பாதுகாப்பு தர இயலாது . மனிதன் அமைதியை தேடி பல தவறுகள் செய்கிறான் , அதுபோல அமைதி கிடைத்த பின்பும் சில தவறுகள் செய்து தனுக்கு கிடைத்த அமைதியை நழுவ விடுகிறான் . மீண்டும் அமைதியை தேடி நாடோடி போல அலைகிறான் . அமைதி என்பது வெளிப்புற உலகத்தில் கிடைப்பதில்லை , அவனுடைய மனசாட்சிகுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறது . இதனை தெரிந்து கொண்டு செயல்பட்டால் அவனுடைய ஒவ்வொரு செயலிலும் தெளிவையும் , பகுத்தறிவையும் காணலாம் .

மனிதன் அமைதி கிடைப்பதற்கு தியானம் செய்கிறான் . தியானம் என்பது அவனுடைய மனநிலையை ஒருநிலை படுத்தி , செய்யப்படும் செயலின் மீது கவனத்தை செலுத்துகிறான் . தியானத்தின் மூலம் மனிதன் தன்னுடைய உடல் , உள்ளம் இரண்டையும் ஒரு நிலைபடுத்தி, நடந்தவை , நடக்கின்றவை , நடக்கப்போகும் நிகழ்வுகளின் மீது தன்னுடைய எண்ணங்களை ஓட விடுகிறான் . தியானத்தின் வழியே அவன் அன்றாட வாழ்க்கையின் இதமான வழியை புரிந்து கொள்கிறான் . அந்த வலி தாங்கும் அளவு வலித்தால் வாழ்க்கையின் இரண்டு சக்கரங்கள் ஒரே நிலையாக ஓடுகிறது . இதே வலி கூடுதலாக வலித்தால் வாழ்க்கையின் இரண்டு சக்கரங்கள் தனித்தனியாக பிரிந்து வெவ்வேறு பாதையில் ஓடத் தொடங்குகிறது . தியானம் என்பது அவனுக்கு வாழ்க்கையின் உண்மையான கருத்தை புரிய வைக்கிறது . தியானத்தின் மூலம் மனிதன் பக்குவமடைகிறான் , பதனப்படுகிறான் . அவன் முகத்தில் சாந்தமும் , தெளிவும் பிறக்கிறது . தியானம் மனிதனுக்கு ஞானத்தை கொடுக்கிறது , அவனை ஒரு குருவாக மாற்றுகிறது .

தியானம் மனிதனின் தன்மையை மாற்றுகிறது . உலகத்தின் பகட்டான வாழ்க்கையை தேடிச்செல்லும் ஒரு சராசரி மனிதனை இதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வைக்கிறது . அவன் இந்த மாய உலகத்தை நன்றாக புரிந்து கொள்கிறான் . இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை என்று தெரிந்து கொள்கிறான் . இந்த உலகத்திலுள்ள பொருட்கள் , இவன் வாழ்ந்து கொண்டிருக்கும் பகட்டான வாழ்க்கை , அவனுடைய உடலும் ஒரு நாள் அழிந்து விடும் , ஆனால் அவனுடைய உள்மனம் , அதாவது மனசாட்சி என்கிற ஆத்மா மட்டும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் . இதற்கு அழிவே கிடையாது . அவன் தன்னை பாதுகாக்க ஆயுதங்களை வைத்துக் கொள்கிறான் , ஆளை நியமிக்கிறான் , தற்காப்பிற்காக சண்டைப் பயிற்சியை கற்றுக் கொள்கிறான் , இப்படி பல பாதுகாப்பு வழிகளை கையாளுகிறான் . ஆனால் ஒன்றை மட்டும் மறந்து மற்ற எல்லா வழிகளையும் செயல்படுத்துவதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்கிறான் . இதனால் எத்தனை சிரமங்களை சந்திக்க நேருகிறது . மேலும் பயனுள்ள நேரத்தை தேவைப்படாத செயலில் மீது செலவழித்து தன்னுடைய பலத்தை பலவீனமாக்கிக் கொள்கிறான் . அவனுடைய மனசாட்சியை பற்றி சிந்திக்காமல், இதர மாயைகளின் மீது தன்னுடைய கவனத்தை ஒட்டு மொத்தமாக செலுத்தி வாழ்க்கையினுடைய பயனுள்ள பகுதியை வீணாக்கி , நாளை என்ன நடக்கும் என்று குழப்பமான நிலையை பெறுகிறான் . இந்தக் குழப்பமே அவனுக்கு பயத்தை தருகிறது . பயம் அவனை சூழ்ந்து கொள்ளும்போது அவனுக்கு எல்லாம் இருட்டாக தென்படுகிறது . மனோதைரியத்தை இழக்கிறான் , அவனுக்கு அவன் மீது அவநம்பிக்கை பிறக்கிறது . எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறான் . மனிதன் மனசாட்சியை அறிந்து செயல்பட்டிருந்தால் இத்தனை பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்க அவசியம் ஏற்பட்டிருக்காது . மனசாட்சி அவனுக்கு அமைதியான முறையிலே எந்தப் பிரச்சனையையும் சமாளிக்கும் தன்மையை கொடுக்கிறது . மனிதனுக்கு அவனுடைய மனசாட்சியே பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்கிறது . இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் ஆத்மாத்ம சந்தோஷத்தை பெறலாம் .

Friday, June 5, 2009

வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொண்டு வாழ வேண்டும்

உலகத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன . அவற்றுள் ஒரு சில சம்பவங்கள் மனிதனுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் கொண்டுவர இயமாலிருக்கலாம், அதாவது இன்று வரை அந்தச் சம்பவத்தை பற்றி நினைவுகூறுவதிற்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம் . ஆனால் ஒரு சில சம்பவங்கள் மனிதனுடைய உள்ளத்திலே பதிந்து விடுகின்றன . இப்படிப்பட்ட சம்பவங்களால் மனித உடல் நிலையில் பல மாற்றங்களைக் காணலாம் . இந்த மாற்றமென்பது சந்தோஷத்தையும் கொடுக்கலாம் அல்லது துயரைத்தையும் கொடுக்கலாம் . இந்த மாற்றம் மனிதனுடைய உடலுக்குள் ஊற்று போல பெருகுகிறது . மனிதனுடைய உடலும் , உள்ளமும் மாற்றத்திற்கு ஏற்றது போல செயல்படுகிறான் . மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு நிக்ழ்வை ஞாபகப் படுத்திச் சொல்கிறான் என்றால் அந்தச் சம்பவம் அவனுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட இடத்தை பிடித்திருக்கிறது என்று சொல்லலாம் . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்குள்ளிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது . மனிதனுடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அவனுடைய வாழ்க்கையோடு இணைந்தது .

சந்தோஷமோ , துயரமோ இந்த இரண்டுக்கும் நடுவே , மனிதன் தன்னுடைய எல்லையை மீறாமல் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும் . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்கு அதிகமான உணர்வுகளை கொடுத்தாலும், அவன் சமநிலையான வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும் . எதையும் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டு செல்லும் மனிதனை ஞானி என்று சொல்லலாம் . ஒரு மனிதனின் வாழ்க்கையில் துயரமிருக்கும்போது அவன் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற விரும்புகிறான் . மீண்டும் மீண்டும் துயரங்களை அவன் சந்திக்கும்போது அவன் போதையை தேடிச் செல்கிறான் . பிரச்சனையில் மூழ்கி வாழ்க்கையை வாழும் சமயத்தில் அதனை மறப்பதற்கு போதையை நாடுகிறான் . அவனுக்கு நடந்த துயரங்களை எல்லாம் மறக்கிறான் , அவன் தன்னையே மறந்து வாழ்கிறான் . சொல்லப்போனால் அவன் நடைபிணமாக நடமாடிக் கொண்டிருக்கிறான் . கடைசியில் அவன் மரணம் அடைகிறான் . ஒரு சம்பவத்தினால் உருவாகும் பிரச்சனையிலிருந்து தன்னை அகற்றிக் கொள்ள அவன் வேறொரு பிடிமானத்தை பிடித்துக் கொள்கிறான் . அவன் இதற்கு பதிலாக உருவாகிய பிரச்சனைக்கு எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு போராடினால் நிச்சயமாக அவன் வாழ்க்கையில் நல்லதொரு முடிவைக் காண முடியுமென்று சொல்லலாம் .

வானத்திலிருந்து மழைத்துளிகள் சாகரத்தில் விழுகின்றன . அந்த மழைத்துளிகள் சாகரத்தோடு கலந்தாலும் அவைகள் தன்னுடைய இருப்புநிலையை துறந்து விடவில்லை . சாகரத்திற்குள் மழைத்துளிகள் இருந்தாலும், அந்தத் துளிகள் ஒவ்வொன்றும் தன்னுடைய மகத்துவத்தை இழக்கவில்லை . அதுபோல மனிதனுக்கு வாழ்க்கை சாகரத்தில் ஒவ்வொரு சம்பவமும் மழைத் துளிகளைபோல தோன்றுகின்றன . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்கு ஒவ்வொரு அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது . இந்த ஒவ்வொரு அனுபவமும் அவனுக்குள்ளே புதியதொரு அனுபவத்தை உருவாக்குகிறது . மீண்டும் இந்த அனுபவங்கள் மனிதனை வாழ்க்கை சாகரத்தோடு இணைக்கிறது . மனிதனுடைய வாழ்க்கை ஒரு சக்கரத்தைபோல சுற்றி சுற்றி வருகிறது . அவனுடைய வாழ்க்கை சக்கரத்தில் ஒரு பொழுதில் சுகமான தென்றலும் , இன்னொரு பொழுதில் சூறாவளியும் வீசுகின்றன . இந்த உண்மையை அறிந்தவன் ஞானி என்று சொல்லலாம், இதை அறியாதவன் முட்டாள் என்று சொல்லலாம் . இந்த இரண்டு நிலைகளுக்கிடையே நம்மைநாமே சமநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும் .

Thursday, June 4, 2009

ஆன்மீகத்தின் ஆழமும் அகலமும்

மனிதனுடைய உடலிலும் உள்ளத்திலும் ஆன்மீகம் நிறைந்துள்ளது . அவன் ஆன்மீகமான வாழ்க்கையை வாழ்கிறான் . மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகத்தை உணரலாம் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளே ஆத்மா அடங்கியுள்ளது . மனிதனுடைய ஆத்மாவை அவனுடைய மனசாட்சி என்று சொல்லலாம் . இந்த மனசாட்சியே மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் வாழ்க்கை தராசில் நிறுத்திப் பார்க்கிறது . இதே மனசாட்சி மனிதனுடைய உடலையும் உள்ளத்தையும் கடவுளோடு இணைக்கிறது . மனிதன் இறைவனோடு உறவை பலப்படுத்துகிறான் . மனசாட்சியுள்ள மனிதன் எதிலும் கடவுளைக் காண்கிறான், கடவுளோடு பேசுகிறான் . அடிப்படையிலே மனசாட்சியுள்ள மனிதன் கடவுளின் எதிரே பிறந்த மேனியுடன் நிற்கும் பச்சைக் குழந்தை போல தோற்றமளிக்கிறான் . மனசாட்சிக்கு பயந்த மனிதன் எப்போதும் உண்மையை நேசிக்கிறான் . உண்மையான வாழ்க்கையை விருப்பத்துடன் வாழ்கிறான் . அவன் அன்பால் எல்லோருடனும் தன்னை பிணைத்துக் கொள்கிறான் , தன்னையே நேசிக்கத் தொடங்குகிறான் .

கடவுள் உண்மையான மனிதனை நேசிக்கிறார் . கடவுள் அவனுக்கு ஆன்மீகத்தின் ஆழத்தையும் அகலத்தையும் தெரியப்படுத்துகிறார் . ஆன்மீகத்தின் அகலப் பார்வை மனிதனுடைய உள் நோக்கத்தை பெருமளவில் மாற்றி அமைக்கிறது . அவனுக்கு பரந்த மனப்பான்மையின் அருமையை தெரியப்படுத்துகிறது . தனக்கென்று யோசிக்காமல் மற்றவர்களுக்காக சிந்திக்கிறான் . பிறருடைய நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை கொடுக்கிறான் . படைத்தவனே இந்த உலகத்தை மற்றவர்களுக்காக படைத்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கையும் மற்றவர்களுக்காக என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான் . ஆன்மீகம் அகலமான பயணத்தின் நோக்கை மனிதனுக்கு தெரியப்படுதுகிறது . இந்த பரந்த உலகை படைத்தவனோடு தன்னுடைய வாழ்க்கை பாதையை இணைத்துக் கொள்கிறான் . ஒவ்வொரு மனிதனும் கடவுளோடு நெருக்கமாக இணைந்து கொள்ள முயலுகிறான் . இதையே அவன் கடவுள் மீது வைத்திருக்கும் ஆழமான நேசம் என்று சொல்லலாம் . கடவுளும் உண்மையான மனிதனுக்கு மட்டும் தான் காட்சி தருகிறார் . அங்கு பொய்மைக்கு இடமில்லை , நேர்மையும் , உண்மையும் மட்டும் தான் நிலைத்து நிற்கின்றன . இந்த பொய்மை என்பது கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஆழமான இடைவெளியை உருவாக்குகிறது . உண்மையான மனிதனின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரை கடவுளைப் பார்க்கலாம் . அவனுடைய உடல் , உள்ளம் , உணர்வு , அறிவாற்றல் , ஆன்மீகம் அனைத்தும் கடவுளைப் பற்றி நினைக்கிறது . இதனை தியானம் என்று சொல்லலாம் .

தியானத்தின் வழியாக அன்றாட நடக்கும் சம்பவத்தைப் பற்றி மனிதன் கடவுளோடு இணைந்து ஆராய்ந்து பார்க்கிறான் . தன்னுடைய உணர்வுகளை கடவுளிடம் வெளிப்படுத்துகிறான் . அறிவாற்றல் மூலம் அவன் குழப்பத்திற்கு தெள்ளத்தெளிவாக தீர்வு காண்கிறான் . அமைதியான வழியிலே எதையும் சமாளிக்கிறான் . ஆழமான ஆன்மீகம் அவனுக்கு மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுக்கிறது . ஆன்மீகத்தின் ஆழத்தை புரிந்து கொண்ட மனிதன் பிறருடைய கசப்பான அனுபவத்திற்கு மருந்து கொடுக்கும் வல்லமையைப் பெறுகிறான் . சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும் பக்குவத்தை பெறுகிறான் . பிறருடைய மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றி புதிய பயணத்தை தொடக்கி வைக்கிறான் . புதிய வாழ்க்கை மனிதனுக்கு உண்மையின் விளிம்புகளை பற்றி அறிய வைக்கிறது . குற்றமுள்ள மனது குறுகுறுக்கிறது . எதையோ ஒன்றை இழந்து விட்டது போன்ற உணர்வை கொடுக்கிறது . உடலும் உள்ளமும் கனத்தது போல தோன்றுகிறது . மனதில் சுமையை தாங்கிக் கொண்டு இருப்பது போல உணர்வைக் கொடுக்கிறது . மனதிலுள்ள பாரத்தை கீழே இறக்கி விட்டால் இந்த உடலும் உள்ளமும் லேசாக தோன்றுகிறது . குற்றத்தை உணர்ந்து பரிகாரம் செய்யும் மனிதனை இந்த உலகமே போற்றி பெருமைப் படும் என்பதில் ஐயமில்லை . அவனை கடவுளும் மன்னிக்கிறார் என்று சொல்லலாம் . உண்மையின் பிரதிபிம்பம் கடவுள், இந்தக் கடவுள் பிரகாசமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக காட்சி தருகிறார் . இந்த உண்மையை புரிந்து கொண்டு நாம் வாழ்க்கையை வழிநடத்தி செல்லுவோம் .