Thursday, June 4, 2009

ஆன்மீகத்தின் ஆழமும் அகலமும்

மனிதனுடைய உடலிலும் உள்ளத்திலும் ஆன்மீகம் நிறைந்துள்ளது . அவன் ஆன்மீகமான வாழ்க்கையை வாழ்கிறான் . மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகத்தை உணரலாம் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளே ஆத்மா அடங்கியுள்ளது . மனிதனுடைய ஆத்மாவை அவனுடைய மனசாட்சி என்று சொல்லலாம் . இந்த மனசாட்சியே மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் வாழ்க்கை தராசில் நிறுத்திப் பார்க்கிறது . இதே மனசாட்சி மனிதனுடைய உடலையும் உள்ளத்தையும் கடவுளோடு இணைக்கிறது . மனிதன் இறைவனோடு உறவை பலப்படுத்துகிறான் . மனசாட்சியுள்ள மனிதன் எதிலும் கடவுளைக் காண்கிறான், கடவுளோடு பேசுகிறான் . அடிப்படையிலே மனசாட்சியுள்ள மனிதன் கடவுளின் எதிரே பிறந்த மேனியுடன் நிற்கும் பச்சைக் குழந்தை போல தோற்றமளிக்கிறான் . மனசாட்சிக்கு பயந்த மனிதன் எப்போதும் உண்மையை நேசிக்கிறான் . உண்மையான வாழ்க்கையை விருப்பத்துடன் வாழ்கிறான் . அவன் அன்பால் எல்லோருடனும் தன்னை பிணைத்துக் கொள்கிறான் , தன்னையே நேசிக்கத் தொடங்குகிறான் .

கடவுள் உண்மையான மனிதனை நேசிக்கிறார் . கடவுள் அவனுக்கு ஆன்மீகத்தின் ஆழத்தையும் அகலத்தையும் தெரியப்படுத்துகிறார் . ஆன்மீகத்தின் அகலப் பார்வை மனிதனுடைய உள் நோக்கத்தை பெருமளவில் மாற்றி அமைக்கிறது . அவனுக்கு பரந்த மனப்பான்மையின் அருமையை தெரியப்படுத்துகிறது . தனக்கென்று யோசிக்காமல் மற்றவர்களுக்காக சிந்திக்கிறான் . பிறருடைய நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை கொடுக்கிறான் . படைத்தவனே இந்த உலகத்தை மற்றவர்களுக்காக படைத்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கையும் மற்றவர்களுக்காக என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான் . ஆன்மீகம் அகலமான பயணத்தின் நோக்கை மனிதனுக்கு தெரியப்படுதுகிறது . இந்த பரந்த உலகை படைத்தவனோடு தன்னுடைய வாழ்க்கை பாதையை இணைத்துக் கொள்கிறான் . ஒவ்வொரு மனிதனும் கடவுளோடு நெருக்கமாக இணைந்து கொள்ள முயலுகிறான் . இதையே அவன் கடவுள் மீது வைத்திருக்கும் ஆழமான நேசம் என்று சொல்லலாம் . கடவுளும் உண்மையான மனிதனுக்கு மட்டும் தான் காட்சி தருகிறார் . அங்கு பொய்மைக்கு இடமில்லை , நேர்மையும் , உண்மையும் மட்டும் தான் நிலைத்து நிற்கின்றன . இந்த பொய்மை என்பது கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஆழமான இடைவெளியை உருவாக்குகிறது . உண்மையான மனிதனின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரை கடவுளைப் பார்க்கலாம் . அவனுடைய உடல் , உள்ளம் , உணர்வு , அறிவாற்றல் , ஆன்மீகம் அனைத்தும் கடவுளைப் பற்றி நினைக்கிறது . இதனை தியானம் என்று சொல்லலாம் .

தியானத்தின் வழியாக அன்றாட நடக்கும் சம்பவத்தைப் பற்றி மனிதன் கடவுளோடு இணைந்து ஆராய்ந்து பார்க்கிறான் . தன்னுடைய உணர்வுகளை கடவுளிடம் வெளிப்படுத்துகிறான் . அறிவாற்றல் மூலம் அவன் குழப்பத்திற்கு தெள்ளத்தெளிவாக தீர்வு காண்கிறான் . அமைதியான வழியிலே எதையும் சமாளிக்கிறான் . ஆழமான ஆன்மீகம் அவனுக்கு மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுக்கிறது . ஆன்மீகத்தின் ஆழத்தை புரிந்து கொண்ட மனிதன் பிறருடைய கசப்பான அனுபவத்திற்கு மருந்து கொடுக்கும் வல்லமையைப் பெறுகிறான் . சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும் பக்குவத்தை பெறுகிறான் . பிறருடைய மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றி புதிய பயணத்தை தொடக்கி வைக்கிறான் . புதிய வாழ்க்கை மனிதனுக்கு உண்மையின் விளிம்புகளை பற்றி அறிய வைக்கிறது . குற்றமுள்ள மனது குறுகுறுக்கிறது . எதையோ ஒன்றை இழந்து விட்டது போன்ற உணர்வை கொடுக்கிறது . உடலும் உள்ளமும் கனத்தது போல தோன்றுகிறது . மனதில் சுமையை தாங்கிக் கொண்டு இருப்பது போல உணர்வைக் கொடுக்கிறது . மனதிலுள்ள பாரத்தை கீழே இறக்கி விட்டால் இந்த உடலும் உள்ளமும் லேசாக தோன்றுகிறது . குற்றத்தை உணர்ந்து பரிகாரம் செய்யும் மனிதனை இந்த உலகமே போற்றி பெருமைப் படும் என்பதில் ஐயமில்லை . அவனை கடவுளும் மன்னிக்கிறார் என்று சொல்லலாம் . உண்மையின் பிரதிபிம்பம் கடவுள், இந்தக் கடவுள் பிரகாசமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக காட்சி தருகிறார் . இந்த உண்மையை புரிந்து கொண்டு நாம் வாழ்க்கையை வழிநடத்தி செல்லுவோம் .

No comments:

Post a Comment