Sunday, June 7, 2009

மனிதனே உன்னை அறிந்து கொள்

உலகில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன . அவற்றில் ஒரு சில சம்பவங்கள் அப்படியே நின்று விடுகின்றன . வேறு சில சம்பவங்கள் ஆழ்ந்த காயம் பட்டு மறையாத வடு போல மனதை அரித்து விடுகின்றன . சம்பவங்களை நல்ல சம்பவங்கள் என்றும் , கெட்ட சம்பவங்கள் என்றும் இரண்டு வகைகளாக பாகுபடுதுகிறோம். நல்ல சம்பவம் நிகழும் போது மனிதனுக்கு இனிமையான உணர்வுகளைத் தருகிறது . கெட்ட சம்பவம் மனிதனுக்கு வேதனையை கொடுக்கிறது . மனிதனுடைய வாழ்க்கைப் பயணத்தில் இந்த இரண்டு சம்பவங்களும் மாறிமாறி நடக்கின்றன . இதனை எந்த மனிதனாலும் தவிர்க்க முடியாது . மனிதனுக்கு ஒரு கெட்ட சம்பவம் நடக்கின்ற போது அடுத்ததும் கெட்டவையாகவே நடக்கிறது . அடுத்தடுத்து கெட்ட சம்பவங்கள் நடக்கின்ற போது மனிதன் வாழ்க்கை என்ற துடுப்பை கைநழுவ விடாமல் தொடர்ந்து எதிர்நீச்சல் போட வேண்டும் . அவன் குழப்பம் அடைந்து அவனுக்குள்ளே ஒருவிதமான பயம் பிறக்கிறது . அப்போது சரியான குரு ஒருவர் கிடைத்திருந்தால் அவன் நிச்சயமாக இந்த வாழ்க்கை சாகரத்தின் கொந்தளிப்பிலிருந்து மீண்டு வர முடியும். அப்படிப்பட்ட குருவிடம் தனி ஒரு மனிதனை மாற்றுவது மட்டுமில்லாமல் மொத்த சமுதாயத்தையும் மற்றக் கூடிய சக்தியும் இருக்கிறது . இன்று ஒவ்வொரு நாடும் அழிவுப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கிறது . இந்த விஷத்தை முளையிலே தூக்கி எரிவதிற்கு பக்குவமான குரு கிடைப்பாரா என்று ஒவ்வொரு மனிதனின் மனமும் ஏங்குகிறது .

ஒரு நாட்டில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதற்கு ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அழிவுப் பாதையை தேர்ந்து எடுத்துக் கொண்டு வன்முறையை கையாண்டு வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்கிறான் . முதலில் கண்மூடித்தனமாக மதம் கொண்ட யானையைப் போல ஒரு நாட்டையே சின்னாபின்னமாக்கிறான். இன்றைய மனிதன் எல்லாவற்றையும் தப்புத்தப்பாகவே முடிவெடுத்து செயல்படுகிறான் . அவனுடைய தப்பான நோக்கம் எவ்வளவு பெரிய சேதத்தை உருவாக்குகிறது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் இந்த அமைதிப் பூங்காவில் புயலடிப்பதற்கு பதிலாக சுகமான தென்றல் வீசியிருக்குமல்லவா ?

மனிதனுடைய மனம் முழுவதும் பொறாமையும் பொச்சரிப்பும் குடிகொண்டுள்ளது . இது போதாதென்று ஏழை - பணக்காரன் , இல்லாதவன் - இருக்கப்பட்டவன் , உயர்ந்தவன் -தாழ்ந்தவன் , ஜாதி -மதம் போன்ற விரோதிகளும் அவனைச் சுற்றி நடமாடுகின்றன . இவை அனைத்தும் மனிதனை ஒரு கொலைக்காரனாகவோ , கொள்ளை அடிப்பவனாகவோ , தீவிரவாதியாகவோ மாற்றுகிறது . இப்படிப்பட்ட மாற்றம் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக அரித்து அவனை மண்ணோடு மண்ணாக புதைத்து விடுகிறது . வீட்டுக்குள்ளே கணவன் -மனைவி கருத்து வேறுபாடு , வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை கைப்பற்றுவதற்கு போடும் தெருச் சண்டை , சமூகத்தின் இருபிரிவினர்களுக்கிடையே நடக்கும் ஜாதிக் கலவரம் , இரு நாட்டு இடையே மதத்தால் உருவாகும் வன்முறைகள் , பயங்கரவாதம் என்று படிப்படியாக நடக்கும் ஒவ்வொரு செயலும் மனிதனை ஒரு காட்டு மிருகமாக காட்டுகிறது . மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனும் வெறித்தனமாக செயல்படும் செயல் ஒரு நாட்டையே சீரழித்து விடுகிறது. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் . அப்போது நாடும் உருப்படும் , அவனுடைய வீடும் உருப்படும் .

Saturday, June 6, 2009

மனசாட்சி மனிதனுக்கு பாதுகாப்பைக் கொடுக்கிறது

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மனசாட்சி வாழ்கிறது . ஒவ்வொரு மனிதனும் மனசாட்சி சொல்கிறபடி நடந்தால் தவறுகள் அதிகமாக நிகழ்வதை தடுக்கலாம் . மனசாட்சி மனிதனுக்கு எது நல்லது , எது கெட்டது என்று தெரியப்படுத்துகிறது . மனிதன் நல்ல செயலை செய்தபிறகு அவன் ஆத்மாத்ம திருப்தி அடைகிறான் . அவன் கெட்டதை செய்தால் குற்ற உணர்வோடு பரிதவிக்கிறான் . இப்படிப்பட்ட மனிதனை மனசாட்சியுள்ளவன்என்று சொல்லலாம் . சொத்துக்கள் , செல்வம் , குடும்பம் இவை அனைத்தும் மனிதனுடன் இறுதிவரை செல்லமுடியாது . ஆனால் அவன் செய்த தர்மம் , புண்ணியம் இரண்டும் ஆத்மசொரூபமாய் மனிதனை வழி நடத்திச் செல்கிறது . இந்த உலகத்தின் மாயை மனிதனுக்கு சொந்தமில்லை , அவை மனிதனுக்கு எந்தவிதத்திலும் அமைதி , பாதுகாப்பு தர இயலாது . மனிதன் அமைதியை தேடி பல தவறுகள் செய்கிறான் , அதுபோல அமைதி கிடைத்த பின்பும் சில தவறுகள் செய்து தனுக்கு கிடைத்த அமைதியை நழுவ விடுகிறான் . மீண்டும் அமைதியை தேடி நாடோடி போல அலைகிறான் . அமைதி என்பது வெளிப்புற உலகத்தில் கிடைப்பதில்லை , அவனுடைய மனசாட்சிகுள்ளே வாழ்ந்து கொண்டிருக்கிறது . இதனை தெரிந்து கொண்டு செயல்பட்டால் அவனுடைய ஒவ்வொரு செயலிலும் தெளிவையும் , பகுத்தறிவையும் காணலாம் .

மனிதன் அமைதி கிடைப்பதற்கு தியானம் செய்கிறான் . தியானம் என்பது அவனுடைய மனநிலையை ஒருநிலை படுத்தி , செய்யப்படும் செயலின் மீது கவனத்தை செலுத்துகிறான் . தியானத்தின் மூலம் மனிதன் தன்னுடைய உடல் , உள்ளம் இரண்டையும் ஒரு நிலைபடுத்தி, நடந்தவை , நடக்கின்றவை , நடக்கப்போகும் நிகழ்வுகளின் மீது தன்னுடைய எண்ணங்களை ஓட விடுகிறான் . தியானத்தின் வழியே அவன் அன்றாட வாழ்க்கையின் இதமான வழியை புரிந்து கொள்கிறான் . அந்த வலி தாங்கும் அளவு வலித்தால் வாழ்க்கையின் இரண்டு சக்கரங்கள் ஒரே நிலையாக ஓடுகிறது . இதே வலி கூடுதலாக வலித்தால் வாழ்க்கையின் இரண்டு சக்கரங்கள் தனித்தனியாக பிரிந்து வெவ்வேறு பாதையில் ஓடத் தொடங்குகிறது . தியானம் என்பது அவனுக்கு வாழ்க்கையின் உண்மையான கருத்தை புரிய வைக்கிறது . தியானத்தின் மூலம் மனிதன் பக்குவமடைகிறான் , பதனப்படுகிறான் . அவன் முகத்தில் சாந்தமும் , தெளிவும் பிறக்கிறது . தியானம் மனிதனுக்கு ஞானத்தை கொடுக்கிறது , அவனை ஒரு குருவாக மாற்றுகிறது .

தியானம் மனிதனின் தன்மையை மாற்றுகிறது . உலகத்தின் பகட்டான வாழ்க்கையை தேடிச்செல்லும் ஒரு சராசரி மனிதனை இதற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வைக்கிறது . அவன் இந்த மாய உலகத்தை நன்றாக புரிந்து கொள்கிறான் . இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை என்று தெரிந்து கொள்கிறான் . இந்த உலகத்திலுள்ள பொருட்கள் , இவன் வாழ்ந்து கொண்டிருக்கும் பகட்டான வாழ்க்கை , அவனுடைய உடலும் ஒரு நாள் அழிந்து விடும் , ஆனால் அவனுடைய உள்மனம் , அதாவது மனசாட்சி என்கிற ஆத்மா மட்டும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் . இதற்கு அழிவே கிடையாது . அவன் தன்னை பாதுகாக்க ஆயுதங்களை வைத்துக் கொள்கிறான் , ஆளை நியமிக்கிறான் , தற்காப்பிற்காக சண்டைப் பயிற்சியை கற்றுக் கொள்கிறான் , இப்படி பல பாதுகாப்பு வழிகளை கையாளுகிறான் . ஆனால் ஒன்றை மட்டும் மறந்து மற்ற எல்லா வழிகளையும் செயல்படுத்துவதற்கு தன்னை தயார் படுத்திக் கொள்கிறான் . இதனால் எத்தனை சிரமங்களை சந்திக்க நேருகிறது . மேலும் பயனுள்ள நேரத்தை தேவைப்படாத செயலில் மீது செலவழித்து தன்னுடைய பலத்தை பலவீனமாக்கிக் கொள்கிறான் . அவனுடைய மனசாட்சியை பற்றி சிந்திக்காமல், இதர மாயைகளின் மீது தன்னுடைய கவனத்தை ஒட்டு மொத்தமாக செலுத்தி வாழ்க்கையினுடைய பயனுள்ள பகுதியை வீணாக்கி , நாளை என்ன நடக்கும் என்று குழப்பமான நிலையை பெறுகிறான் . இந்தக் குழப்பமே அவனுக்கு பயத்தை தருகிறது . பயம் அவனை சூழ்ந்து கொள்ளும்போது அவனுக்கு எல்லாம் இருட்டாக தென்படுகிறது . மனோதைரியத்தை இழக்கிறான் , அவனுக்கு அவன் மீது அவநம்பிக்கை பிறக்கிறது . எல்லாம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள்கிறான் . மனிதன் மனசாட்சியை அறிந்து செயல்பட்டிருந்தால் இத்தனை பிரச்சனைகளுக்கு ஆளாகியிருக்க அவசியம் ஏற்பட்டிருக்காது . மனசாட்சி அவனுக்கு அமைதியான முறையிலே எந்தப் பிரச்சனையையும் சமாளிக்கும் தன்மையை கொடுக்கிறது . மனிதனுக்கு அவனுடைய மனசாட்சியே பாதுகாப்பான வாழ்க்கையை கொடுக்கிறது . இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் ஆத்மாத்ம சந்தோஷத்தை பெறலாம் .

Friday, June 5, 2009

வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொண்டு வாழ வேண்டும்

உலகத்தில் எத்தனையோ சம்பவங்கள் நடக்கின்றன . அவற்றுள் ஒரு சில சம்பவங்கள் மனிதனுடைய வாழ்க்கையில் எந்த மாற்றமும் கொண்டுவர இயமாலிருக்கலாம், அதாவது இன்று வரை அந்தச் சம்பவத்தை பற்றி நினைவுகூறுவதிற்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம் . ஆனால் ஒரு சில சம்பவங்கள் மனிதனுடைய உள்ளத்திலே பதிந்து விடுகின்றன . இப்படிப்பட்ட சம்பவங்களால் மனித உடல் நிலையில் பல மாற்றங்களைக் காணலாம் . இந்த மாற்றமென்பது சந்தோஷத்தையும் கொடுக்கலாம் அல்லது துயரைத்தையும் கொடுக்கலாம் . இந்த மாற்றம் மனிதனுடைய உடலுக்குள் ஊற்று போல பெருகுகிறது . மனிதனுடைய உடலும் , உள்ளமும் மாற்றத்திற்கு ஏற்றது போல செயல்படுகிறான் . மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஏதாவது ஒரு நிக்ழ்வை ஞாபகப் படுத்திச் சொல்கிறான் என்றால் அந்தச் சம்பவம் அவனுடைய வாழ்க்கையில் தனிப்பட்ட இடத்தை பிடித்திருக்கிறது என்று சொல்லலாம் . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்குள்ளிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது . மனிதனுடைய வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவமும் அவனுடைய வாழ்க்கையோடு இணைந்தது .

சந்தோஷமோ , துயரமோ இந்த இரண்டுக்கும் நடுவே , மனிதன் தன்னுடைய எல்லையை மீறாமல் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும் . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்கு அதிகமான உணர்வுகளை கொடுத்தாலும், அவன் சமநிலையான வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ள வேண்டும் . எதையும் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டு செல்லும் மனிதனை ஞானி என்று சொல்லலாம் . ஒரு மனிதனின் வாழ்க்கையில் துயரமிருக்கும்போது அவன் அந்த வாழ்க்கையிலிருந்து வெளியேற விரும்புகிறான் . மீண்டும் மீண்டும் துயரங்களை அவன் சந்திக்கும்போது அவன் போதையை தேடிச் செல்கிறான் . பிரச்சனையில் மூழ்கி வாழ்க்கையை வாழும் சமயத்தில் அதனை மறப்பதற்கு போதையை நாடுகிறான் . அவனுக்கு நடந்த துயரங்களை எல்லாம் மறக்கிறான் , அவன் தன்னையே மறந்து வாழ்கிறான் . சொல்லப்போனால் அவன் நடைபிணமாக நடமாடிக் கொண்டிருக்கிறான் . கடைசியில் அவன் மரணம் அடைகிறான் . ஒரு சம்பவத்தினால் உருவாகும் பிரச்சனையிலிருந்து தன்னை அகற்றிக் கொள்ள அவன் வேறொரு பிடிமானத்தை பிடித்துக் கொள்கிறான் . அவன் இதற்கு பதிலாக உருவாகிய பிரச்சனைக்கு எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு போராடினால் நிச்சயமாக அவன் வாழ்க்கையில் நல்லதொரு முடிவைக் காண முடியுமென்று சொல்லலாம் .

வானத்திலிருந்து மழைத்துளிகள் சாகரத்தில் விழுகின்றன . அந்த மழைத்துளிகள் சாகரத்தோடு கலந்தாலும் அவைகள் தன்னுடைய இருப்புநிலையை துறந்து விடவில்லை . சாகரத்திற்குள் மழைத்துளிகள் இருந்தாலும், அந்தத் துளிகள் ஒவ்வொன்றும் தன்னுடைய மகத்துவத்தை இழக்கவில்லை . அதுபோல மனிதனுக்கு வாழ்க்கை சாகரத்தில் ஒவ்வொரு சம்பவமும் மழைத் துளிகளைபோல தோன்றுகின்றன . இந்தச் சம்பவங்கள் மனிதனுக்கு ஒவ்வொரு அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது . இந்த ஒவ்வொரு அனுபவமும் அவனுக்குள்ளே புதியதொரு அனுபவத்தை உருவாக்குகிறது . மீண்டும் இந்த அனுபவங்கள் மனிதனை வாழ்க்கை சாகரத்தோடு இணைக்கிறது . மனிதனுடைய வாழ்க்கை ஒரு சக்கரத்தைபோல சுற்றி சுற்றி வருகிறது . அவனுடைய வாழ்க்கை சக்கரத்தில் ஒரு பொழுதில் சுகமான தென்றலும் , இன்னொரு பொழுதில் சூறாவளியும் வீசுகின்றன . இந்த உண்மையை அறிந்தவன் ஞானி என்று சொல்லலாம், இதை அறியாதவன் முட்டாள் என்று சொல்லலாம் . இந்த இரண்டு நிலைகளுக்கிடையே நம்மைநாமே சமநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும் .

Thursday, June 4, 2009

ஆன்மீகத்தின் ஆழமும் அகலமும்

மனிதனுடைய உடலிலும் உள்ளத்திலும் ஆன்மீகம் நிறைந்துள்ளது . அவன் ஆன்மீகமான வாழ்க்கையை வாழ்கிறான் . மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் ஆன்மீகத்தை உணரலாம் . ஒவ்வொரு மனிதனுக்குள்ளே ஆத்மா அடங்கியுள்ளது . மனிதனுடைய ஆத்மாவை அவனுடைய மனசாட்சி என்று சொல்லலாம் . இந்த மனசாட்சியே மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலையும் வாழ்க்கை தராசில் நிறுத்திப் பார்க்கிறது . இதே மனசாட்சி மனிதனுடைய உடலையும் உள்ளத்தையும் கடவுளோடு இணைக்கிறது . மனிதன் இறைவனோடு உறவை பலப்படுத்துகிறான் . மனசாட்சியுள்ள மனிதன் எதிலும் கடவுளைக் காண்கிறான், கடவுளோடு பேசுகிறான் . அடிப்படையிலே மனசாட்சியுள்ள மனிதன் கடவுளின் எதிரே பிறந்த மேனியுடன் நிற்கும் பச்சைக் குழந்தை போல தோற்றமளிக்கிறான் . மனசாட்சிக்கு பயந்த மனிதன் எப்போதும் உண்மையை நேசிக்கிறான் . உண்மையான வாழ்க்கையை விருப்பத்துடன் வாழ்கிறான் . அவன் அன்பால் எல்லோருடனும் தன்னை பிணைத்துக் கொள்கிறான் , தன்னையே நேசிக்கத் தொடங்குகிறான் .

கடவுள் உண்மையான மனிதனை நேசிக்கிறார் . கடவுள் அவனுக்கு ஆன்மீகத்தின் ஆழத்தையும் அகலத்தையும் தெரியப்படுத்துகிறார் . ஆன்மீகத்தின் அகலப் பார்வை மனிதனுடைய உள் நோக்கத்தை பெருமளவில் மாற்றி அமைக்கிறது . அவனுக்கு பரந்த மனப்பான்மையின் அருமையை தெரியப்படுத்துகிறது . தனக்கென்று யோசிக்காமல் மற்றவர்களுக்காக சிந்திக்கிறான் . பிறருடைய நலனுக்காக தன்னுடைய வாழ்க்கையை கொடுக்கிறான் . படைத்தவனே இந்த உலகத்தை மற்றவர்களுக்காக படைத்திருக்கும்போது நம்முடைய வாழ்க்கையும் மற்றவர்களுக்காக என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறான் . ஆன்மீகம் அகலமான பயணத்தின் நோக்கை மனிதனுக்கு தெரியப்படுதுகிறது . இந்த பரந்த உலகை படைத்தவனோடு தன்னுடைய வாழ்க்கை பாதையை இணைத்துக் கொள்கிறான் . ஒவ்வொரு மனிதனும் கடவுளோடு நெருக்கமாக இணைந்து கொள்ள முயலுகிறான் . இதையே அவன் கடவுள் மீது வைத்திருக்கும் ஆழமான நேசம் என்று சொல்லலாம் . கடவுளும் உண்மையான மனிதனுக்கு மட்டும் தான் காட்சி தருகிறார் . அங்கு பொய்மைக்கு இடமில்லை , நேர்மையும் , உண்மையும் மட்டும் தான் நிலைத்து நிற்கின்றன . இந்த பொய்மை என்பது கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ஆழமான இடைவெளியை உருவாக்குகிறது . உண்மையான மனிதனின் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால்வரை கடவுளைப் பார்க்கலாம் . அவனுடைய உடல் , உள்ளம் , உணர்வு , அறிவாற்றல் , ஆன்மீகம் அனைத்தும் கடவுளைப் பற்றி நினைக்கிறது . இதனை தியானம் என்று சொல்லலாம் .

தியானத்தின் வழியாக அன்றாட நடக்கும் சம்பவத்தைப் பற்றி மனிதன் கடவுளோடு இணைந்து ஆராய்ந்து பார்க்கிறான் . தன்னுடைய உணர்வுகளை கடவுளிடம் வெளிப்படுத்துகிறான் . அறிவாற்றல் மூலம் அவன் குழப்பத்திற்கு தெள்ளத்தெளிவாக தீர்வு காண்கிறான் . அமைதியான வழியிலே எதையும் சமாளிக்கிறான் . ஆழமான ஆன்மீகம் அவனுக்கு மற்றவர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் சக்தியைக் கொடுக்கிறது . ஆன்மீகத்தின் ஆழத்தை புரிந்து கொண்ட மனிதன் பிறருடைய கசப்பான அனுபவத்திற்கு மருந்து கொடுக்கும் வல்லமையைப் பெறுகிறான் . சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும் பக்குவத்தை பெறுகிறான் . பிறருடைய மனதில் ஏற்பட்ட காயத்தை ஆற்றி புதிய பயணத்தை தொடக்கி வைக்கிறான் . புதிய வாழ்க்கை மனிதனுக்கு உண்மையின் விளிம்புகளை பற்றி அறிய வைக்கிறது . குற்றமுள்ள மனது குறுகுறுக்கிறது . எதையோ ஒன்றை இழந்து விட்டது போன்ற உணர்வை கொடுக்கிறது . உடலும் உள்ளமும் கனத்தது போல தோன்றுகிறது . மனதில் சுமையை தாங்கிக் கொண்டு இருப்பது போல உணர்வைக் கொடுக்கிறது . மனதிலுள்ள பாரத்தை கீழே இறக்கி விட்டால் இந்த உடலும் உள்ளமும் லேசாக தோன்றுகிறது . குற்றத்தை உணர்ந்து பரிகாரம் செய்யும் மனிதனை இந்த உலகமே போற்றி பெருமைப் படும் என்பதில் ஐயமில்லை . அவனை கடவுளும் மன்னிக்கிறார் என்று சொல்லலாம் . உண்மையின் பிரதிபிம்பம் கடவுள், இந்தக் கடவுள் பிரகாசமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக காட்சி தருகிறார் . இந்த உண்மையை புரிந்து கொண்டு நாம் வாழ்க்கையை வழிநடத்தி செல்லுவோம் .

Sunday, May 31, 2009

மனிதனின் பலம் நம்பிக்கையில் தான்

மனிதனாக பிறப்பதற்கு அறிய மாதவம் செய்ய வேண்டும் என்ற பழமொழியை நமது முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம் . பூர்வ ஜன்மத்தில் புரிந்த நல்ல கர்மவினையால் நாம் அடுத்த பிறவியில் மனிதனாக பிறக்கிறோம் என்று புராணங்கள் சொல்லுகின்றன . இந்த மனிதப் பிறவியை அபூர்வமான பிறவி என்றும் சொல்லலாம் . எத்தனையோ பிறவிகள் நாம் எடுத்திருப்போம் , அதிலும் மனிதப் பிறவி நமக்கு கிடைத்த பொக்கிஷமாகும் . இந்த பிறவியில் அறிவாற்றல் , மனோசக்தி , திறமை மூன்றும் இணைந்து மனிதனை செயல்படுத்துகிறது . இவைகளே மனித்னக்குள்ளிருக்கும் சக்தி என்று சொல்லலாம். இந்த சக்தியானது மனிதனுக்கு அவனை பற்றி தெரிந்து கொள்ளச் செய்கிறது . அவனுக்குள்ளே புதைந்து கிடக்கும் திறமையை வெளிக்கொண்டு வருகிறது . மனிதனுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது . தனம்பிக்கையுள்ள மனிதன் சாதனையை படைக்கிறான் . மாபெரும் வரலாற்றை உருவாக்குகிறான் . மனிதனுடைய சக்தியே மனிதகுலத்தை வளர்க்கிறது . இந்த சக்தி அழகிய நம்பிக்கையான சமுதாயத்தை படைக்கிறது . நம்பிக்கையானது மனிதனை சாதிக்க முடியாதவற்றையும் சாதிக்கும்படி செயல்படுத்துகிறது .
எதோ ஒரு சக்தி இந்த உலகத்தை இயங்க வைக்கிறது . இந்த சக்தியை கடவுள் என்றும் சொல்லலாம் , மனிதனின் நம்பிக்கை என்றும் சொல்லலாம் . இதிலிருந்து நம்பிக்கை தான் கடவுள், கடவுள் தான் நம்பிக்கை என்ற அடிப்படை பதிலையும் நாம் பெறுகிறோம் . இந்த சக்தி உலகத்தை ஒரு கட்டுபாட்டுக்குள் இயங்க வைக்கிறது . இதனை மீறி இயங்கினால் உலகம் தன்னுடைய அழிவையும் காண நேரிடுகிறது . இயற்க்கை மற்ற அனைத்து ஜீவன்களும் தங்களுடைய இருப்பிடத்தில் இருந்து கொண்டு செயல்பட்டால் உன்னதமான உலகத்தை உருவாக்கலாம் . இந்த ஒரு நம்பிக்கையே மனிதனுக்கு பக்கபலமாக அமைகிறது . அவனுடைய நம்பிக்கை துளிகள் மாபெரும் சாகரத்தை உருவாக்குகிறது . அதுவே அன்பு, அறிவு , பாசம், பண்பு ஆற்றல் , நேர்மை , பண்பாடு ஆகிய இயல்புகளை மனிதனுக்கு தருகிறது .

மனிதன் மட்டும் தான் ஆறு அறிவோடு பிறக்கிறான் . இந்த ஆறாவது அறிவானது மனிதனுக்கு சமீபத்தில் நிகழப் போகும் சம்பவத்தை முன்கூட்டியே உணர வைக்கிறது. இந்த அறிவாற்றலானது மனிதனை அபூர்வமான செயலை செயல்படுத்தச் செய்கிறது . நடக்கப் போகும் அசம்பாவிததிலிருந்து மனிதனை காப்பாற்றுகிறது . அவனுடைய அன்பும் பாசமும் சமுதாயத்தை வாழ வைக்கிறது , மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறான் . மனிதனுடைய பலம் நம்பிக்கையில் தான் என்ற உண்மையை அவனுக்கு அறிய வைக்கிறது.

மனிதனுக்கு எது உண்மையான சந்தோசம்

உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சந்தோசத்தை அனுபவிக்கிறான் . சந்தோசத்தின் பரிமாணத்தை ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் வெவ்வேறு கோணத்தில் சந்திக்கிறான் . ஒருவன் அமைதியில் சந்தோசத்தை காண்கிறான் , இன்னொருவன் நல்ல உறவுகளையும், நண்பர்களையும் பெற்றதில் சந்தோசம் அடைகிறான் , மற்றொருவன் ஒவ்வொரு செயலிலும் வெற்றி காணும் போது சந்தோசம் பெறுகிறான் . ஆனால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் சந்தோசத்தை வெவ்வேறு விதமாக அனுபவித்தாலும் , இந்த சந்தோசமானது மனிதனுக்கு புதிய தெம்பைக் கொடுக்கிறது . இன்பமயமான சூழ்நிலையை உருவாக்குகிறது , உறவுகளை பலப்படுத்துகிறது . ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தை எந்த நோக்கத்தோடு புரிந்து கொள்கிறான் என்பது மிகவும் முக்கியம் .

வாழ்க்கை என்றால் அதனோடு சந்தோசத்தையும் இணைத்து பேசப்படுகிறது . வாழ்க்கையின் சந்தோசம் ஆத்மா சந்தோசம் என்றும் , வெளிப்படையான சந்தோசம் என்றும் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது . ஒவ்வொரு மனிதனும் அவனது முழுமையான வாழ்க்கையில் இந்த இரண்டு வகையான சந்தோசங்களை அனுபவிக்கிறான் . மனிதன் இளவயதிலே பெரிய பதவியை வகிக்கிறான் , அதிக செல்வத்தை சம்பாதிக்கிறான் , ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கிறான் . அந்த சின்ன வயதில் ஒளிமயமான பல வண்ணங்களுடைய வாழ்க்கை மனிதனுக்கு சந்தோசத்தை தருகிறது . அப்போது அவன் சந்தோசத்தை குறுகிய நோக்கத்தோடு பார்க்கிறான். அந்த இளவயதானது சந்தோசத்தை ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்து ரசிக்கிறது . அந்த வயதில் மனிதன் அவனுடைய சந்தோசத்தை மட்டும் தான் சிந்திக்கிறான். மேலும் மனிதனின் எண்ணங்களும் அவனைப் பற்றி தான் சிந்திக்கிறது . தான் என்ற எண்ணம் கொண்டு வாழும் மனிதனின் வாழ்க்கையில் சந்தோசம் நிலைத்து இருப்பதில்லை . பொன், பொருள் , பதவி , கௌரவம், ஆடம்பரம் , ஆணவம் ஆகிய அனைத்திலும் சந்தோசத்தை காணும் மனிதனுடைய வாழ்க்கை வெறும் வெத்து வெட்டான வாழ்க்கைக்கு சமமாகும் . இதனை வெளிப்படையான சந்தோசம் என்று சொல்லலாம் . இந்த வெளிப்படையான சந்தோசம் மனிதனுக்கு ஒரு போதும் நிலைப்பதில்லை . இந்த தத்துவத்தை மனிதன் கடைசி காலத்தில் அறிந்து கொள்கிறான் . அதுவரை இந்த பகட்டான வாழ்க்கை மனிதனை படாதபாடு படுத்தி விடுகிறது . அந்த சமயத்தில் மனிதன் பள்ளம் மேடு , ஏற்றத் தாழ்வு , உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று வாழ்க்கையினுடைய பல்வேறு பரிமாணங்களை அனுபவிக்கிறான் . மனிதன் வாழ்க்கையில் பல சம்பவங்களை சந்திக்கிறான் . அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அவனுக்கு ஒவ்வொரு பாடத்தை கற்பிக்கிறது .

அவன் வாழ்க்கையில் பலமுறை விழுந்து எழுகிறான் . ஒவ்வொரு விழுதலும் அவனுக்குள்ளே மாற்றத்தை கொண்டு வருகிறது . இந்த மாற்றம் அவனுடைய மனதை பக்குவப்படுத்துகிறது . அவனுடைய பகுத்தறிவை வளரச் செய்கிறது . இந்த மாற்றமானது மனிதனுடைய எண்ணத்தை மாற்றி அமைக்கிறது . மனிதனுக்கு வாழ்க்கையில் பல எண்ணங்கள் தோன்றுகின்றன . அவனுடைய ஒவ்வொரு எண்ணமும் வாழ்க்கையில் ஒவ்வொரு சம்பவத்தை நிகழச் செய்கிறது. இந்த சம்பவமானது அவனை ஆக்கப்பூர்வமான செயலை செயல்படுத்த வைக்கிறது . இந்த மாற்றமானது மனிதனை தனக்கு மட்டும் எண்ணாமல் மொத்த சமூகத்தை பற்றி எண்ணவைக்கிறது. வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திலிருந்து கிடைக்கும் நல்ல பலன்களை மனிதன் சமூகத்தோடு பகிர்ந்து கொள்கிறான் . இந்த மாற்றம் மனிதனுக்கு பரந்த மனப்பான்மையை கொடுக்கிறது . அவன் அனைத்தையும் பரந்த நோக்கத்தோடு அணுகுகிறான் . மனிதன் சமூகத்தை பற்றி அக்கறை எடுத்துக் கொள்கிறான் . அப்போது மனிதன் தன்னுடைய நலத்தை மட்டும் கருதாமல் சமூகத்தின் நலத்தை பெரிதும் கருதுகிறான் . மனிதன் சமூகத்தின் வளர்ச்சியை கண்டு சந்தோசம் பெறுகிறான் . தனுக்கு கிடைத்த சந்தோசத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறான் . தனுக்குள்ளே ஏற்படும் மாற்றத்தின் வழியாக புதிய சமூகத்தை படைக்கிறான் . வளமான சமுதாயம் மக்களின் வாழ்க்கையை மலரச் செய்கிறது . மனிதனுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது . மனிதன் சமூகத்தை நேசிக்க தொடங்குகிறான் . இந்த மாற்றம் அன்பு, பாசம் , கருணை , பண்பு ஆகிய தன்மைகளை மனிதனுக்கு வரமாக அளிக்கிறது . அவனுக்குள்ளே தன்னம்பிக்கை பிறக்கிறது . இந்த மாற்றம் மனிதனை மனிதனாக வைக்கிறது . இந்த மாற்றம் மனிதனுக்கு ஆத்மா சந்தோசத்தை கொடுக்கிறது . மனிதன் எந்த வயதிலும் சந்தோசத்தை பெறுகிறான் , எந்த நேரத்திலும் சந்தோசத்தை அடைகிறான் . இதற்கு வயது வரம்பில்லை , காலம் தடையில்லை . மனிதன் இந்த ஆத்மதிருப்தியை உணர்கிறான் , அனுபவிக்கிறான் . மனிதன் அனுபவிக்கும் ஆத்மதிருப்தி தான் வாழ்க்கையில் உண்மையான சந்தோசம் . இந்த சந்தோசத்தை பற்றி மனிதனுக்கு எந்த மொழியாலும் புரிய வைக்க முடியாது . இதை மனிதன் உணரத் தான் முடியும் . எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றும் அறிவேன் பராபரமே என்ற கருத்தைக் கொண்டு வாழும் மனிதன் விலைமதிக்க முடியாத உண்மையான சந்தோசத்தை அடைகிறான் .


Saturday, May 30, 2009

ஆன்மீகமும் வாழ்க்கையும்

ஆன்மிகம் மனிதனுடைய வாழக்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றுகிறது . ஆன்மீகம் என்பது மனிதனின் வாழக்கையில் தோன்றும் புதிர்களுக்கு தீர்வு கொடுத்து உண்மையான பக்தியும், நம்பிக்கையும் வளர்க்கிறது . ஆன்மீகமானது மனிதனுடைய வாழ்க்கையில் பரவசத்தை கொடுக்கிறது .

ஒரு கட்டிடம் வலிமையாக நிற்பதற்கு அதனுடைய அடித்தளத்தை வலிமையாக அமைக்க நேரிடுகிறது . அதுபோல மனிதனின் வாழ்க்கையில் புத்துணர்ச்சியும் , தெம்பும் பெறுவதற்கு அவனுள்ளே புதைந்து கிடைக்கும் ஆன்மீகம் வளர வேண்டும். புத்துணர்ச்சி நிறைந்த வாழ்க்கை மனிதனின் வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையாக மாற்றி அதனுடைய ஆழ்ந்த நோக்கத்தை புரியவைக்கிறது. நாம் எதற்கு வாழ்கிறோம் என்று புரியாமல் வாழ்க்கை வாழ்வது நடுக்கடலில் படகு ஒன்று திசை மாறி மேல செல்ல முடியாமல் தவிப்பது போலிருக்கிறது . ஆன்மீகமானது வாழ்க்கையின் பாதையை மனிதனுக்கு உணர்த்துகிறது . மனிதனை கடவுளோடு இணைக்கிறது . ஆன்மீகம் மனிதனின் வாழக்கையை நம்பிக்கையோடு மாற்றி அமைப்பதில் பெரிதும் உதவுகிறது.

ஆன்மீகத்தால் மனிதன் முழுமையான வாழக்கையை அடைகிறான். மனிதனுக்குள்ளே ஆன்மீகம் வளர வளர அவனது வாழ்க்கையும் தூய்மை பெறுகிறது. மனிதனுக்கும் கடவுளுக்குமிடையே உள்ள ஒரு உறவை வளர்க்கிறது . கடவுளோடு இணைந்துக் கொண்ட மனிதன், அனைத்து மனித குலத்தொடும் உறவை வளர்த்துக் கொள்கிறான் . ஆன்மீகமானது மனிதனை அனைத்து ஜீவன்களையும், பூமியின் இயற்க்கை வளத்தையும் நேசிக்க வைக்கிறது.

ஆன்மீகம் மனிதனுக்குள்ளே மிதந்து கொண்டிருக்கும் அகம்பாவம், ஆணவம் போன்ற குணங்களை அழித்து விடுகிறது . அவனுக்குள்ளே அன்பையும், பரிவையும் நிரப்புகிறது. ஆன்மீகம் மனிதனை மனிதாபிமானம் நிறைந்த மனிதனாக மாற்றுகிறது .

ஆன்மீகத்தை கடைபிடிப்பதற்கு எந்தவிதமான சாதனையோ அல்லது தனிபயிற்சியோ செய்ய அவசியமில்லை . மனிதன் கடவுளிடம் கொண்ட மதிப்பும், உயர்வும் அதிகரித்து அவனுள்ளே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துகிறது . அதையே ஆன்மீகம் என்று சொல்லலாம் . இந்த விழிப்புனர்சியே அவனை பெரிய ஞானியாக மாற்றுகிறது. ஞானியானவன் தெளிவான சிந்தனையை அறிவுரையின் மூலம் மக்களுக்கு போதிக்கிறான் . ஞானம் நிறைந்த மனிதன் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் இடையே நிலவி வரும் வேறுபாட்டை அழிக்கிறான் . ஞானம் நிறைந்த மனிதன் எந்த மதம் மனிதகுலத்தை அழிக்க முற்படுகிறதோ அந்த மதத்தை மக்களிடையே பரப்புவதற்கு ஒரு பொழுதும் முயற்சி எடுத்துக் கொள்ளமாட்டான். மதமும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்று மக்களுக்கு உணர்த்துகிறான் .

நமக்குள்ளே இருக்கும் தனிமையை அழித்து மக்களோடு மக்களாக இணைந்து அன்பை பொழிந்து, உறவுகளை வளர்த்து கடைசியில் கடவுளை அடைவது தான் தலைசிறந்த மதத்தின் அடையாளம் . ஞானம் நிறைந்தவனும் இந்த சாரத்தை போதிக்கிறான் , ஆன்மீகத்தை மக்களிடையே வளர்க்கிறான், நல்ல எண்ணங்களுக்கு விதை விதைக்கிறான் . ஆன்மீகம் மனிதன் தழைப்பதற்கு ஒரு ஊன்று கோலாக அமைகிறது . ஆன்மீகம் நிறைந்தவன் எந்த கடினமான பிரச்சனைக்கும் தெளிவான சிந்தனையோடு அமைதியான வழியிலே தீர்வு கொள்கிறான் .

ஆன்மீகம் விஞ்ஞானத்தையும் வளரச் செய்கிறது . விஞ்ஞானத்தோடு சமூக வளர்ச்சியும் பெறுகிறது . சமூக வளர்ச்சி என்பது மனிதனின் வாழ்க்கையோடு இணைந்தது என்று சொல்லலாம் . அவனது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைக்கிறது .

புரிந்தும் புரியாத வாழ்க்கை வாழ்வதை விட வாழ்க்கையின் தத்துவத்தை அறிந்து கொண்டு வழிநடத்தி செல்லுபவன் தான் வாழ்க்கையின் உன்னதமான நோக்கத்தை புரிந்து கொள்கிறான் . ஆன்மீகம் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை தெரியபடுத்துகிறது . வாழ்க்கையின் சிறப்பான சாரத்தை அறிய வைக்கிறது . இதை அறிந்து வாழ்பவன் தான் முழுமையான வாழ்க்கையை வாழ்க்கிறான் . நமக்குள்ளே பிறக்கும் பல கேள்விகளுக்கு இந்த ஆன்மீகம் தான் பதில் கொடுக்கிறது . நமக்குள்ளே இருக்கும் ஆன்மாவை கேட்டால் ஆன்மீகத்தின் உண்மையான அர்த்தத்தை புரிய வைக்கும் .